சென்னை: உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் சட்டத்தின் சந்து பொந்துகளில் அதிமுக அரசு பதுங்கி வருவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2016 அக்டோபரில் நடத்தி முடித்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை இரண்டாண்டுகளாக அஇஅதிமுக அரசு நடத்த மறுத்து வருகிறது.
குடிநீர், சுகாதாரம், மருத்துவம், குடிமைப் பொருள் விநியோகம், நலத்திட்டப் பயனாளிகள் தேர்வு, திட்டப்பணிகள் செயலாக்கம், பேரிடர் கால நிவாரண பணிகள் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்கு உள்ளாட்சி அமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் உதவி செய்து வந்தனர். தங்களின் நம்பிக்கைக்கு உரிய பிரதிநிதிகளை தேர்வு செய்து கொள்ளும் உரிமை மக்களுக்கு மறுக்கப்படுவது ஜனநாயக விரோதச் செயலாகும். இதன் மூலம் அதிகார வர்க்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகள் ஊக்கப்படுத்தப்படுகின்றது. ஊழல் நடைமுறைகளுக்கு வழிவகுக்கிறது.
மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளாமல் குப்பை வரி, சொத்து வரி, என வரிகளை உயர்த்தியும், புதிய வரிகளை விதித்தும், வசூலிக்கும் நடவடிக்கைளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிழந்து, தேர்தலை சந்தித்தால் படுதோல்வி நிச்சயம் என்ற அச்சத்தில் சட்டத்தின் சந்து, பொந்துகளில் பதுங்கி வரும் அஇஅதிமுக அரசு உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிகாலத்தை மேலும் 6 மாதகாலம் (ஜூன் 2019) நீடித்திருப்பது ஜனநாயக மரபுகளுக்கும், நடைமுறைகளுக்கும், அரசியல் அமைப்பு சட்ட நிலைகளுக்கும் எதிரானது. அஇஅதிமுக அரசின் மக்கள் விரோத, சட்ட அத்துமீறல் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டிக்கிறது. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.