அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றவில்லை என்றால், ராணுவத்தை பயன்படுத்த கூட தயங்கப் போவதில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் உள்ள கரிக்காட்டு குப்பம், சுனாமி குடியிருப்பில், அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், எனவே, அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடடிவக்கை எடுக்க கோரியும் ஜான்சி ராணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்றும்படி கரிக்காட்டு குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தனர். இவ்வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு நெருங்கிய நிலையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத் அரசுக்கு எதிராக ஜான்சி ராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நில ஆக்கிரமிப்பாளர்களால், மனுதாரரின் கணவர் தாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், தேவைப்பட்டால் ராணுவத்தை வரவழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட தயங்கப் போவதில்லை எனத் தெரிவித்தனர்.