காலத்துக்கு ஏற்றவாறு இளம் வழக்குரைஞர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று பதவியிலிருந்து ஓய்வு பெறும் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா கூறினார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் நீதிபதி எஸ்.விமலா பேசியதாவது:
உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக எனது பணியைச் சிறப்பாக செய்துள்ளதாக நம்புகிறேன். எனது பணிக்காலத்தில் வழக்குகள் நடத்தி பலரது மகிழ்ச்சிகளையும், துக்கங்களையும் கடந்து வந்துள்ளேன். சில நேரங்களில் தீர்ப்பு வழங்குவதில் தாமதித்திருக்கலாம், ஒருபோதும் நீதி வழங்குவதில் தாமதித்தது இல்லை. சில வழக்குகளில் சட்டம் அதற்கான எல்லையை வரையறுத்திருந்தாலும், நீதியை நிலைநாட்ட எல்லையைத் தாண்டி தீர்ப்பளித்திருக்கிறேன்.
வளர்ந்து வரும் இளம் வழக்குரைஞர்கள் அறிவுசார் சொத்துரிமை, சைபர் குற்றங்கள் தொடர்பான சட்டங்களில் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீதித்துறையில் இளம்பெண் வழக்குரைஞர்களின் பங்களிப்பு அளப்பரியது. அதே நேரத்தில் நீதியைத் தேடி நீதிமன்றங்களுக்கு வரும் பொதுமக்களின் நிலையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
இந்த பிரிவு உபசார விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எஸ்.மணிக்குமார், எம்.வேணுகோபால், எம்.சத்தியநாராயணன், சி.டி.செல்வம், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம், எம்.துரைசாமி, டி.ராஜா, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு வழக்குரைஞர்கள், பெண் வழக்குரைஞர்கள், பல்வேறு வழக்குரைஞர் சங்கப் பிரதிநிதிகள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.