சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 24 மணி நேரமும் கூடுதலாக 250 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டு சிறப்பு முன்பதிவு செயலறைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த 09.01.2019 அன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார்கள்.
சென்னையிலிருந்து 11, 12, 13 மற்றும் 14.01.2019 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ள 14,263 பேருந்துகளில் 11ஆம் தேதி 3,529 பேருந்துகளும், 12ஆம் தேதி 3,741 பேருந்துகளும், 13ஆம் தேதி 3,411 பேருந்துகளும், 14ஆம் தேதி 3,582 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10,445 பேருந்துகள் என ஆக மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதவரம் புதிய பேருந்துநிலையம்
தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (MEPZ)
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்
பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்
கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம்
கே.கே.நகர் பேருந்து நிலையம்
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட பேருந்து நிலையங்கள்/பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இன்று முதல் பின்வருமாறு 12.01.2019, 13.01.2019, 14.01.2019 ஆகிய 4 நாட்களில் 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. மேலும் வழிதவறிய பயணிகள் உரிய பேருந்து நிலையங்களுக்கு ன்றடைந்திடும் வகையிலும் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் தங்களது புகார்களை அல்லது கருத்துகளை தெரிவித்திட ஏதுவாக, கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் 18004256151 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.