தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்யக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பிளாஸ்டிக் பை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக்


தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பிளாஸ்டிக் பை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. 
பல்வேறு பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. அதில், தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு மட்டுமே தடை விதித்துள்ளது. ஆனால் சோதனை செய்ய வரும் அதிகாரிகள் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருள்களையும் பறிமுதல் செய்கின்றனர். மேலும் சோதனைக்கு வரும் அதிகாரிகளுக்கு அரசு பிறப்பித்துள்ள இந்த தடை உத்தரவு தொடர்பாக தெளிவான புரிதல் இல்லை. எனவே தமிழக அரசால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்யத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு எந்த பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதோ அந்த உத்தரவை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அதே நேரத்தில், அரசாணை குறித்து அதிகாரிகளுக்கு சரியான புரிதல் இருக்க வேண்டும். அரசால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்யக்கூடாது என உத்தரவிட்டு, இந்த மனுவுக்கு அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com