தலைமைச் செயலர் மீதான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவு

குட்கா விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்ததாக தலைமைச் செயலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட
தலைமைச் செயலர் மீதான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவு


குட்கா விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்ததாக தலைமைச் செயலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இதுதொடர்பான ஆவணங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய வருமான வரித் துறை முதன்மை இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு விவரம்: குட்கா முறைகேடு தொடர்பாக கடந்த 2016-இல் சென்னையில் குட்கா நிறுவன கிட்டங்கிகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது காவல்துறையினர், உயர் அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின.
இதில், டிஜிபி ராஜேந்திரன் (அப்போதைய சென்னை காவல் ஆணையர்), சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது விவரங்கள் இருந்தன. இதுகுறித்து அப்போதைய தலைமைச் செயலர் ராமமோகனராவ், அப்போதைய டிஜிபி அசோக்குமார் ஆகியோருக்கு வருமான வரித் துறை முதன்மை ஆணையர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், குட்கா முறைகேட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருந்தார். 
இந்நிலையில் குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி, நான் ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தேன். அந்த மனுவின்மீதான விசாரணையின்போது, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 
அதில், குட்கா முறைகேட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான எந்த ஆவணமும் அரசு அலுவலகங்களில் இல்லை எனக் கூறியிருந்தார். இதனை ஏற்று, எனது வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டில், கடந்த 2017-இல் வருமானவரித் துறை சோதனையின்போது, குட்கா முறைகேட்டில் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வருமான வரித்துறை அளித்த கடிதம் உள்ளிட்ட சில ஆவணங்கள் சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டன.
இந்த ஆவணங்கள், வருமான வரித் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளன.
எனவே, இந்த விவகாரத்தில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தவறான தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வருமான வரித் துறையினரிடம் அவர்கள் கடிதம் அனுப்பியது மற்றும் அது தலைமைச் செயலர் அலுவலகத்துக்குச் சென்றடைந்ததற்கான ஆவணங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து, குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறையினர் கடிதம் அனுப்பியது மற்றும் அது தலைமைச் செயலர் அலுவலகத்துக்குச் சென்றடைந்ததற்கான ஆவணங்களை சீலிட்ட உறையில், வருமான வரித் துறையின் முதன்மை இயக்குநர் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜன. 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com