திமுக நடத்தும் ஊராட்சி சபைக் கூட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள 17 புதிய பேருந்துகளின் தொடக்க நிகழ்ச்சி பெரியார் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் சில வழிகாட்டுதல்களை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்துள்ள ஊராட்சி சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்கவில்லை. திமுக நிர்வாகிகள் தான் இருக்கின்றனர். திமுகவுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்பதை இந்த ஊராட்சி சபைக் கூட்டம் தெளிவுபடுத்தியிருக்கிறது என்றார்.