திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் உரிம ஏலத்தை ரத்து செய்க: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தித்தல் 

திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கும் உரிம ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தித்தியுள்ளது. 
திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் உரிம ஏலத்தை ரத்து செய்க: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தித்தல் 

சென்னை: திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கும் உரிம ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தித்தியுள்ளது. 

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பாஜக மத்திய அரசு முடிவு செய்துள்ளது . முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து "மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது" என உறுதியளிக்கப்பட்டது. 

காவிரி பாசனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் 13 மனித உயிர்களை பறித்த வேதாந்த நிறுவனத்திற்குஉரிமம் வழங்கப்பட்டது.இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து மத்திய அரசு வழங்கிய உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

ஆனால், மோடியின் பாஜக மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கவில்லை. ஐனநாயக அணுகுமுறை கடைபிடிக்கவில்லை. மாறாக ஏதேச்சதிகார நடைமுறையில் தற்போது,மேலும் 419.19 சதுரக் கிலோ மீட்டர் நிலப்பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்து திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் உரிமம் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டி 66 டி எம் சி தண்ணீரை தேக்கிக் கொள்ள, விரிவான திட்டம் தயாரிக்க கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்கிய பாஜக மத்திய அரசு தமிழகத்தின் காவிரிப் பாசனப் பகுதிகளை பாலைவனம் ஆக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. 

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜகவின் மக்கள் விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 

திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கும் உரிம ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வற்புறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com