ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழையா? என 10% இடஒதுக்கீடு தரும் மத்திய அரசின் மசோதா குறித்து ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆரம்பத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இறுதியில் ஆதரவு அளித்தமையால் நாடாளுமன்றத்தில் இரு அவையிலும் எவ்வித சிக்கல் இன்றி மசோதா நிறைவேறியது. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10%இடஒதுக்கீடு தரும் மத்திய அரசின் மசோதா பற்றி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில்,
பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி, ஏழைகளாம்! மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு! ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.