தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பிப்ரவரி 3-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி வியாழக்கிழமை கூறியது:
தமிழக சுகாதாரத் துறையின் தொடர் நடவடிக்கையால் கடந்த 15 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த ஆண்டு குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பேருந்து நிறுத்தங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் மூலம் சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விடுபடும் குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றார்.