தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதல்வர்,
மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படுவதால் அதிமுக அரசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும். துரோகம் செய்பவர்களுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது.
கிராமத்தையே பார்க்காதவர் ஸ்டாலின், ஏனெனில் அவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். துணை முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது செல்லாமல் தற்போது கிராமங்களுக்கு செல்கிறார் ஸ்டாலின்.
அதிமுக அரசை பற்றி ஸ்டாலின் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார். அனைத்து மக்களும் சிறப்பாக பொங்கலை கொண்டாட ரூ.1000 பரிசு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.