சென்னை: பனி மூட்டம் காரணமாக ஏற்கனவே காலை வேளைகளில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் குறைந்த தூரத்துக்கே தெளிவாக பார்க்கும் நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை போகிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளதை நினைத்து, விமான நிலைய அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின் போது காலையில் இயக்கப்படும் 16 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 42 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. 40க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த ஆண்டும் அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதால், காலையில் இயக்கப்படும் விமானங்களின் நேரத்தை ஒரு சில நாட்களுக்கு மாற்றியமைக்கும் திட்டத்தில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களிடம் போகிப் பண்டிகையின் போது விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை விமான நிலையம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.