கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணம் என்ன?, சிசிடிவி கேமரா ஏன் வேலை செய்யவில்லை? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா.
கோடநாடு இல்லத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை, கொலை மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் ஒட்டுமொத்த தொண்டர்களை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியது.
அச்சம்பவங்களின் பின்னணியில் பதவியில் இருக்கும் ஏதோ ஒரு பெரும்புள்ளிக்கு தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், நேற்று டெகல்கா நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் அவர்கள் தில்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த குற்றச் சம்பவங்களுக்குப் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அவரும் மற்றும் இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய சயனும் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.
கோடநாடு இல்லத்திலிருந்து கோப்புகளை திருடிவரச்சொன்னது எடப்பாடி பழனிசாமி தான் என ஓட்டுநர் கனகராஜ் தன்னிடம் கூறியதாக சயன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோடநாடு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா.
அதில், கோடநாடு எஸ்டேட் கொள்ளை நடந்தபோது அங்குள்ள 27 சிசிடிவி கேமராக்களில் ஒன்று கூட ஏன் வேலை செய்யவில்லை? சொத்துக்குவிப்பு வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்தபோது ஒரு காவலர் கூட இல்லையா?, 24 மணி நேரமும் தடையில்லா மின்சார வசதியுள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணம் என்ன? தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூவ் சாமுவேல் வெளியிட்ட தகவலுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று கேட்பது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ராஜா, இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். முதல்வருக்காகத்தான் கொள்ளையில் ஈடுபட்டதாக பேட்டியளித்த சயனை அப்ரூவராக மாற்ற வேண்டும். முதல்வர் கொடுத்த மனுவை வைத்தே காவல்துறையினர் விசாரணையை தொடங்க வேண்டும். அனைத்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இரண்டு கோணங்களிலும் விசாரித்தால், எடப்பாடி பழனிசாமி தான் வழக்கின் குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் சேர்ப்பதற்கான ஆதாரம் கிடைக்கும். கூட்டு சதி என்றால் இதில் முதல் குற்றவாளி எடப்பாடி பழனிசாமிதான். முதல்வர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையை சயன் என்பவரிடமிருந்து தொடங்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால், அதில் எடப்பாடி பழனிசாமி பெயர்தான் முதலில் குறிப்பிட வேண்டும்.
இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் எனக் கூறுவதற்கு முதல்வர் ஏன் தடுமாறுகிறார். ஆணையரிடம் மனு கொடுத்தால், அவரே முதல்வருக்கு கீழ்தான் பணிசெய்கிறார். அப்படியிருந்தால் விசாரணை எப்படி நேர்மையாக இருக்கும்.
மேலும், கோடநாடு காவலாளி மரண வழக்கில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதற்கான சமிக்கைகள் இருக்கின்றன. அங்கு அடுத்தடுத்து நடைபெற்றுள்ள கொலை, கொள்ளைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
முதல்வர் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவர் குறைந்தபட்சம் உள்துறை இலாக்காவையாவது வேறொருத்தருக்கு கொடுக்க வேண்டும். காவல்துறை இலாக்காவையும் கொடுக்க வேண்டும்.
கோடநாடு அடுத்தடுத்து நடந்த மர்ம மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் திமுக அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்று ஆ.ராசா கூறினார்.