சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தெஹல்கா முன்னாள் ஆசிரியர் வெளியிட்ட ஆவணப் படம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, இந்த செய்தியின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வேண்டும் என்றே ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. யாரிடமும் எந்த ஆவணங்களையும் ஜெயலலிதா பெற்றதில்லை. இது தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்டு வழக்கை திசை திருப்ப சிலர் திட்டமிட்டுள்ளனர்.
கோடநாடு விவகாரம் நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் கழித்து புகார் தெரிவித்திருப்பது ஏன்? தமிழக அமைச்சர்கள் அனைவரும் மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கிறாக்ரள். எனவே, அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள திராணியற்றவர்கள் இப்படி பொய்ப்புகார்களை பரப்புகிறார்கள் என்று பழனிசாமி தெரிவித்தார்.