சென்னை விமான நிலையத்தில் இரு கொரிய பெண்களிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்த விவரம்:
ஹாங்காங்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை அதிகாலை ஒரு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். மேலும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது கொரிய நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள், தங்களிடம் சுங்கவரி செலுத்துவதற்குரிய எந்த பொருள்களும் இல்லை என்று கூறி, கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றனர். ஆனால் அந்த பெண்கள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், அந்த இரு பெண்களையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். இச் சோதனையில், அந்த பெண்கள் தங்களது உள்ளாடை பகுதியில் ரூ.8 கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்திக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள், அந்த தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இரு பெண்களையும் அதிகாரிகள் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். அந்த பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் ஏற்கெனவே இதுபோன்ற கடத்தலில் ஈடுபட்டிருப்பதும், சுற்றுலா விசாவில் சிங்கப்பூர், துபை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இதேபோன்று தங்கக் கட்டிகளைக் கடத்திக் கொண்டு வந்திருப்பதும், கூலிக்காக இரு பெண்களும் கடத்தலில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.