ராசிபுரம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே சரியான தண்டனையாக இருக்கும் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் 3 ஆயிரம் பேருக்கு ஒன்றரை லட்சம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும் என்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி புரிந்து வருவதாகவும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறிய அமைச்சர் தங்கமணி, இதனை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களே அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், கொடநாடு விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டி, முதல்வர் மீது வீண் பழி சுமத்துவதாக கூறினார்.