சென்னை: போகி தினமான இன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசின் அளவு குறைவுதான் என்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
தமிழ் மாதமான மார்கழியின் இறுதி நாளில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த நாளின்போது பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து போகியை கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
அந்த வகையில் இந்த ஆண்டும் போகிப் பண்டிகை திங்களன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிகாலையில் தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை சேகரித்து வீடுகளின் முன்பு வைத்து எரித்தனர்.
முன்னதாக காற்றை மாசுபடுத்தும் வகையில் டயர் உள்ளிட்ட பொருட்களை எரித்து போகியை கொண்டாடக் கூடாது என்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கி இருந்தது.
இந்நிலையில் போகி தினமான இன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசின் அளவு குறைவுதான் என்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.