சென்னையில் கடும் போகி புகை மூட்டம்: 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

பனி மற்றும் கடும் புகை மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்
சென்னையில் கடும் போகி புகை மூட்டம்: 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்


சென்னை: பனி மற்றும் கடும் புகை மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2018 ஜனவரி 14 இல் டயர், பழைய பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து பொதுமக்கள் எரித்ததால், கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இந்த புகைமூட்டத்தின் காரணமாக, காலை11 மணி வரை விமானங்களை இயக்க முடியவில்லை. அதிகாலை முதல் புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை 73 விமானங்கள் பல இடங்களுக்கு புறப்படுகின்றன. 45 விமானங்கள் பல இடங்களில் இருந்து தரை இறங்குகின்றன. போகி புகையினால் 11 மணிக்கு மேல் தரையிறங்குகின்ற விமானங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால், புறப்பட வேண்டிய விமானங்கள் எல்லாம் காலதாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் பலமணி நேரம் விமானநிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

கடந்த ஆண்டு ஏற்பட்ட முன்அனுபவத்தின் அடிப்படையில், விமானநிலைய அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து, இந்த ஆண்டு பயணிகளின் அசவுகரியங்களை குறைப்பதற்காக, சென்னை விமானநிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களில் நேரங்களை முன்கூட்டியே தெளிவாக தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப பயணிகள் தங்களது பயணங்களை திட்டமிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர். இதற்காக 'சென்னை ஏர்போர்ட்' என்ற செயலியை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும்,  விமானபோக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில், பழையபொருட்களை எரிப்பதை தவிர்த்து ஆதரவு அளிக்கும்படி விமானநிலையம் அருகே வசிக்கும் பொதுமக்களை கேட்டுக்கொண்டிருந்தது விமான நிலைய நிர்வாகம். 

இந்நிலையில், போகி பண்டிகையான இன்று பொதுமக்கள் வேண்டா பழைய பொருட்கள் எரித்து வருவதால் சென்னை முழுவதும் புகை மண்டமாக காட்சி அளித்து வருகிறது. 

பனி மூட்டம் மற்றும் போகி புகை மூட்டம் காரணமாக சென்னையிலிருந்து அந்தமான், மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சிங்கபூா், துபாய் உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னை வரும் விமானங்கள் சேவையிலும் 2 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது. 

சென்னை - பெங்களூரு, சென்னை - மும்பை செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com