காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.45 லட்சத்துக்கு விற்பனையாயின.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 241 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 80 மாடுகள் மொத்தம் ரூ.45 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்துக்கு காங்கயம் இன செவலைப் பசு (கிடாரி) விற்பனையானது.