சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியலில் தங்களை நேரடியாக எதிர்க்க முடியாத சக்தியற்ற எதிர்க்கட்சிகள் கொடநாடு விவகாரத்தில் அவதூறு பரப்பி வருகிறது. பொய்யான குற்றச்சாட்டுகளை அரசு எதிர்கொள்ளும்.
கொடநாடு விவகாரம் குறித்து ஆதாரம் இருந்தால் அதனை காவல்துறையிடம் தெரிவிக்கலாம். ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பழைய நண்பர்களை மோடி கூட்டணிக்கு அழைத்தது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, 2004 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்ததை சுட்டிக்காட்டி அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம். பியூஷ் கோயல் அதிமுகவுடன் பேசுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்படும் என்றும், கூட்டணி தொடர்பாக விரைவில் நல்லது நடக்கும் என்று பன்னீர்செல்வம் கூறினார்.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரை சந்தித்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடும்படி கோரிக்கை வைக்க உள்ளார்.