ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது விபத்துதான் என்று சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது. மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கியது.
பின் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே கார் விபத்தில் இறந்தார். இதற்கிடையே கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை தொடர்பான தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஒரு விடியோ காட்சித் தொகுப்பை கடந்த 11-ஆம் தேதி வெளியிட்டார்.
அந்த விடியோ காட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்கும், ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் இறந்ததற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் கூறுகையில்,
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது விபத்துதான். விபத்தை நேரில் பார்த்ததாக எந்த சாட்சிகளும் இல்லை. விபத்தில் உயிரிழந்த கனகராஜ் உடற்கூறு ஆய்வில் அவர் மது அருந்தியது தெரியவந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.