அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூவர் தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பிஞ்சு நெஞ்சங்களில் திருக்குறளை பதிய வைத்தால் உலகம் முழுவதும் சண்டை சச்சரவுகள் நீங்கும். நாற்பதும் நமது, நாடும் நமது என்கிற அடிப்படையில் தேர்தல்களில் அதிமுக வெற்றிபெறும்.
சட்டப்பேரவை, நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும். முதல்வர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக, மடியில் கனமில்லை. தமிழ்நாட்டில் மதுவை கொண்டு வந்ததே வைரமுத்து நெருக்கமாக இருக்கும் திமுகதான். தமிழ்நாட்டில் ஒரே நாளில் முழு மதுவிலக்கை கொண்டுவர முடியாது.
மதுவின் தீங்கு குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நோக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார். அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர்.