சென்னை: சென்னையை அடுத்து உள்ள வண்டலூர் பூங்காவுக்கு காணும் பொங்கலான இன்று மதியம் 12 மணி வரை 10 ஆயிரம் பேர் வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருவது வழக்கம்.
இன்று காணும் பொங்கல் என்பதால், முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வண்டலூர் பூங்காவுக்கு அதிகமான பொதுமக்கள் வந்திருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அது வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் பூங்காவுக்கு 10 ஆயிரம் பேர் வந்துள்ளனர். எதிர்பார்த்ததை விடவும் அதிகளவில் பொதுமக்கள் வந்திருப்பதாக பூங்கா நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் கூட்டம் காரணமாக சைக்கிள் சேவை மற்றும் பேட்டரி கார் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாகவும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.