மரக்காணம் அருகே வியாழக்கிழமை குடும்பத் தகராறில் தனது 4 மாதக் குழந்தையை தூக்கி சுவரில் வீசிக் கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கோட்டிக்குப்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மதியழகன்(30). கட்டுமானத் தொழிலாளி.
அதே ஊரைச் சேர்ந்தவர் பொன்னி (24). இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு இரு குழந்தைகள்.
இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் மது போதையில் இருந்த மதியழகனுக்கும், மனைவி பொன்னிக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, ஆத்திரமடைந்த மதியழகன், அங்கிருந்த தனது 4 மாத பெண் குழந்தை மீராவை தூக்கி சுவரில் வீசி எறிந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அந்தக் குழந்தை வீரிட்டு அழுதது.
உடனடியாக, குழந்தை மீராவை தாய் பொன்னி மரக்காணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.