சபரிமலை விவகாரத்தில் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சபரிமலை விவகாரத்தில் பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும். அது புரட்சிக்கான இடம் இல்லை. ஆன்மிக இடம். பெண் பக்தர்கள் யாரும் அங்கு செல்லவில்லை. ஏதோ சாதிக்கிறேன் என்ற நோக்கத்துடன் சென்றுள்ளார்கள். இதனால் பலரது மனம் துன்பப்பட்டுள்ளது. யாருடைய மனதையும் துன்பப்படுத்தக் கூடாது. நிஜமான பக்தி இருக்கும் பெண்கள் கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டும். அயோத்தியில், ராமர் கோயில் பிரச்னை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்படவேண்டும். இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து ராமர் கோயில் கட்ட வேண்டும் என்றார். அப்போது அவருடன் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.