சென்னை: பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தின் 124-ஆவது திருத்த மசோதா என்ற பெயரிலான இந்த சட்ட முன்வடிவுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆரம்பத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இறுதியில் ஆதரவு அளித்தமையால் நாடாளுமன்றத்தில் இரு அவையிலும் எவ்வித சிக்கல் இன்றி மசோதா நிறைவேறியது.
இந்நிலையில், இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சி சார்பாக தொடுக்கப்பட்டுள்ள முதல் வழக்கான இது, வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சமத்துவத்திற்கான இளைஞர்கள் அமைப்பின் (Youth For Equality organisation) சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.