சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கூலமேட்டில் ஜல்லிக்கட்டு விழாவை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பளர் தீபா கனிகர், புத்திரகவுண்டன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஆர்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னத்தம்பி, இந்திய விலங்குகள் நல வாரியம், ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு கூட்டுநர் மருத்துவர் எஸ்.கே.மிட்டல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்து ஆட்சியர் பேசியது: தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு, மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட பின் போட்டியில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்து 519 காளைகளும், 242 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். மாடுபிடி வீரர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனியாக இப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழுகளும், 108 ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, போட்டி நடத்தப்படுகிறது.
மாடுபிடி வீரர்கள் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகப் பின்பற்றி காளைகளுக்கு எவ்வித தீங்கும் நேராமல் பாதுகாப்பாக பங்கேற்க வேண்டும். விழாக் குழு உறுப்பினர்கள், காளைகளின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகக் கடைப்பிடித்திட வேண்டும் என்றார்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசித்தார். அவருடன் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடங்கியது. காளைகள் வரிசையாக களம் இறக்கப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்க முயற்சித்தனர். போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ம.செல்வன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் கா.ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் செல்வம், கூலமேடு ஜல்லிக்கட்டு விழா ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கந்தசாமி, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.