சென்னை சோழிங்கநல்லூரில் அந்த தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உறவினர் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
அனைத்து மதத்தினருக்கும் பொதுவான தலைமை செயலகத்தில் துணை முதல்வர் அறையில் ரகசிய யாகம் நடத்தப்பட்டுள்ளது. அதற்கு அதிகாரம் வழங்கியது யார்? ஒருவேளை ஆவிகளோடு தியானம் செய்ததால் தான் அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கும்.
கொடநாடு விவகாரத்தில் கொலைக் குற்றவாளியாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறைக்கு செல்வார். அதனால் தான் தனக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என பன்னீர்செல்வம் மீண்டும் யாகம் செய்துள்ளார்.
கொடநாடு பங்களாவில் வருமான வரி சோதனைக்கு பயந்து முக்கிய ஆவனங்கள் திருடப்பட்டுள்ளன. இதில் எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா திட்டமிட்டு பயன்படுத்திகொண்டார். இதில் முதல்வர் குற்றமற்றவர் என்பது உண்மையாக இருந்திருந்தால் பதவி விலகி விசாரணைக்கு தன்னை உட்படுத்தியிருக்க வேண்டும்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நாங்கள் பாஜக-வுக்கு அடிமையாக இருக்கமாட்டோம் என சொல்வதில் இருந்தே அவர்கள் அடிமையாகத்தான் இருக்கிறார்கள் என புரிந்துகொள்ள முடிகிறது.
பாஜக அகற்றப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் மட்டுமா அல்லது சட்டமன்ற தேர்தலும் சேர்ந்தே வருமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னையில் திமுக நடத்திய கூட்டத்தில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலித்தோம். ஒவ்வொரு மாநிலத்திலும் சூழல் வேறுபடுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் பிரதமரை தேர்வு செய்யலாம் என மேற்கு வங்கத்தில் எண்ணுகிறார்கள்.
ஆகையால், நான் மேற்கு வங்கத்தில் இதுகுறித்து பேசவில்லை, இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.