காவல்துறை டிஜிபியாக டி.கே. ராஜேந்திரன் நீடிக்க இடைக்காலத் தடை கோரிய மனு நிராகரிப்பு

தமிழக காவல்துறை இயக்குநராக டி.கே.ராஜேந்திரன் செயல்பட இடைக்கால தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிராகரித்துள்ளது.
காவல்துறை டிஜிபியாக டி.கே. ராஜேந்திரன் நீடிக்க இடைக்காலத் தடை கோரிய மனு நிராகரிப்பு


மதுரை: தமிழக காவல்துறை இயக்குநராக டி.கே.ராஜேந்திரன் செயல்பட இடைக்கால தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அளித்த பதில் மனுவை ஏற்று இந்த மனு நிராகரிக்கப்பட்டது.

அதே சமயம், டிஜிபியாக, டி.கே. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டதை எதிர்த்த பிரதான வழக்கில் தமிழகத் தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் ஜனவரி 29ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: 
தமிழக காவல்துறையில் டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரன், குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இதே போன்ற வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டி.கே.ராஜேந்திரன் மீதான லஞ்ச புகார் குறித்த வருமானவரித் துறையின் கடிதம், கோப்புகளை ஆராய்ந்தபோது கிடைக்கவில்லை என தமிழக தலைமைச் செயலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு மறைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் 2017 நவம்பரில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில், சசிகலாவின் அறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. டி.கே.ராஜேந்திரனின் நலன் கருதியே, அந்த ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளது. எனவே, டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பு நியமனத்தை சட்டவிரோதம் என அறிவித்து உத்தரவிட வேண்டும். குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ அமைப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவலர் சட்ட விதிப்படி புதிய டிஜிபியை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, வழக்கின் எதிர்மனுதாரர்களுக்கு (மத்திய, மாநில அரசுகள், முன்னாள் தலைமை செயலர், சசிகலா) நீதிமன்ற குறிப்பாணை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, எதிர்மனுதாரர்கள் இதுதொடர்பாக பதிலளிக்குமாறு நீதிமன்ற குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அதுவரை டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதிகள் இந்த வழக்கில் பல துறையினர் சம்மந்தப்பட்டிருப்பதால், இடைக்கால தடை விதிக்க இயலாது என மறுப்பு தெரிவித்து, வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த கோரிக்கை தொடர்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது, இடைக்காலத் தடை கோரிய மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com