சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதி சுவரில் பதித்திருந்த கண்ணாடி உடைந்து விழுந்தது. விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது 85-ஆவது முறையாகும்.
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்கள் ரூ.2,200 கோடி செலவில் நவீன முறையில் கண்ணாடி மாளிகை போல் கட்டப்பட்டது.
இது கடந்த 2013-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அது முதல் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது கண்ணாடிகள் உடைந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வப்போது நடைபெறும் இந்த விபத்துகளில் இதுவரை அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் பயணிகள், பயணிகளை வழியனுப்ப வந்தவர்கள், விமான நிலைய தற்காலிகப் பணியாளர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் என 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை காலையில் 85-ஆவது முறையாக கண்ணாடி உடைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. உள்நாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் 17 ஆவது நுழைவு வாயிலில் கண்ணாடிகள் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்து உடைந்து சிதறியது. எனினும் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.