மதுரை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களின் ஊழியர்கள் நடத்த இருந்த உள்ளிருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கோயில் ஊழியர்களின் போராட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நலன் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் கோயில் பணியாளர்கள் நடத்தவிருக்கும் உள்ளிருப்புப் போராட்டத்தை ஒத்திவைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியது. மேலும் தகவல் பெற்று தெரிவிக்க கோயில் ஊழியர்கள் சங்கத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
போராட்டத்தை ஒத்திவைத்தால் அறநிலையத்துறை ஆணையரை நேரில் வரவழைத்து விசாரிப்பதாகவும் கூறியது. இதனை ஏற்று கோயில் ஊழியர்கள் தங்களது உள்ளிருப்புப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்து அறநிலையத்துறை ஆணையர் நாளை மறுநாள் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.