ராமேசுவரம் மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பு
நெடுந்தீவு அருகே சனிக்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
இலங்கை கடற்டையினர் மூன்று விசைப்படகுகளை பறிமுதல் செய்ததையும், 19 மீனவர்களை கைது செய்ததையும் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் 5 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை இப் போராட்டத்தை கைவிட்டு 599 விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது இரும்பு கம்பியால் தாக்கி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், ஒரு மீனவர் பலத்த காயமடைந்தார். மேலும் ஒரு படகும் சேதமடைந்தது. இந்த இழப்புடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினர். 5 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்த சம்பவம் மீனவர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. தங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரை திரும்பிய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.