ரூ.230 கோடியில் வைகைஆற்றை தூய்மைப்படுத்தும் பணி: முதல்வர் பழனிசாமி
மதுரை வைகை ஆற்றை ரூ.230 கோடியில் துய்மைப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கள்ளிக்குடியை தலைமை இடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கி தந்த முதல்வருக்கு நன்றி அறிவிக்கும் விழா மற்றும் கொடியேற்று விழா கள்ளிக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலரும், வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வி.வி. ராஜன்செல்லப்பா முன்னிலை வகித்தார்.
இதில், 80 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிவைத்து முதல்வர் பேசியதாவது: திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கள்ளிக்குடியை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் என, வருவாய்த் துறை அமைச்சர் கோரிக்கை விடுத்தார். அதன்படி, கள்ளிக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனிவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்த ரூ. 230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
எதிர்க் கட்சியினர் வேண்டுமென்றே எங்களை குறை கூறி வருகின்றனர். ஏழைகளுக்கு வழங்கிய பொங்கல் பரிசைக் கூட தடுத்து நிறுத்த திமுகவினர் திட்டமிட்டனர். மக்கள் துணையுடன் எதிர்க் கட்சியினரின் திட்டங்களை முறியடிப்போம். எப்போதும் மக்கள் எங்கள் பக்கமே என்றார்.
முன்னதாக, முதல்வருக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. இதில், இளைஞரணி மாவட்டச் செயலர் எம். ரமேஷ், புறநகர் மாவட்ட துணைச் செயலர் அய்யப்பன், ஒன்றிய துணைச் செயலர் நிலையூர் முருகன் உள்பட அக்கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சாத்தூரில் வரவேற்பு: திருநெல்வேலி செல்லும் வழியில் சாத்தூரில் கட்சியினரிடையே பேசிய முதல்வர், விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்கும் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.