வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு.. தமிழக அரசு கடுமையான எச்சரிக்கை

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று தமிழக முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு.. தமிழக அரசு கடுமையான எச்சரிக்கை


சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று தமிழக முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு எல்லாம் முதன்மையானவரும், தமிழக அரசின் முதன்மைச் செயலருமான கிரிஜா வைத்தியநாதன் கடந்த 18ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், ஜனவரி 22ம் தேதி அனைவரும் பணிக்கு வர வேண்டும். விடுப்பில் உள்ளவர்களும் பணியில் சேர வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நாளை பணிக்கு வர வேண்டும். பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும்.  ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. 

இந்த போராட்டங்கள் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.  வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகளின் யோசனையை ஏற்று போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் திட்டமிட்டபடி ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவித்தது.

இந்த வழக்கு மீண்டும் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெற்ற பின் ஜாக்டோ ஜியோ தரப்பு கூறியதாவது:

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுத்தரப்பு தொடர்ந்து அவகாசம் மட்டுமே கோருகிறது. எனவே திட்டமிட்டபடி ஜனவரி 22ல் வேலைநிறுத்தம் நடைபெறும்.

இரு தரப்பு வாதத்தை தொடர்ந்து வழக்கு ஜனவரி 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com