தமிழகத்தில் இந்த ஆண்டு 18 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு

மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் தமிழகத்தில் உள்ள 18 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை 2019 ஆம் ஆண்டு முதல் முழுமையாக
தமிழகத்தில் இந்த ஆண்டு 18 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு

மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் தமிழகத்தில் உள்ள 18 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை 2019 ஆம் ஆண்டு முதல் முழுமையாக நிறுத்த முடிவு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.
இவற்றில் ஒரு கல்லூரி மட்டும் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்துள்ளது. மீதமுள்ள 17 கல்லூரிகள், கால அவகாசம் முடிந்த பிறகும் எந்தவொரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இதன் மூலம் 2019-20 கல்வியாண்டில் இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாது என்றனர் பல்கலைக்கழக அதிகாரிகள்.
அமெரிக்க பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2011-ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வந்தது. பெரிய அளவில் பணிகள் கிடைக்காததால், இந்த நிறுவனங்கள் ஆள்குறைப்பில் ஈடுபட்டன. இதன் காரணமாக 2013 ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் படிப்படியாகக் குறைந்தது. மாணவர் சேர்க்கை குறைந்ததால், பொறியியல் கல்லூரிகளும் படிப்படியாக மூடப்பட்டு வந்தன.
ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்) புள்ளி விவரத்தின்படி, 2015-16 கல்வியாண்டில் தமிழகத்தில் 533 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. 2016-17 இந்த எண்ணிக்கை 527 ஆகக் குறைந்தது. 2017-18 ஆம் ஆண்டில் மேலும் குறைந்து 523 ஆக மாறியது.
இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டில் தகவல்தொழில்நுட்பத் துறை மீண்டும் மேம்படத் தொடங்கியது. தேவையும் அதிகரித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆர்வம் மீண்டும் எழுந்தது. இதன் காரணமாக, 2018-19 கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை மீண்டும் 533 என்ற நிலையை எட்டியது.
22 கல்லூரிகளில் சேர்க்கை இல்லை: ஆனால், கல்லூரி நிர்வாகிகள் எதிர்பார்த்த அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மாணவர் சேர்க்கை குறைந்தது. அண்ணா பல்கலைக்கழக புள்ளி விவரங்களின்படி, 2018-19 கல்வியாண்டு பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவில் மொத்தம் இடம்பெற்றிருந்த 1,72,581 இடங்களில் 74,601 இடங்கள் மட்டுமே நிரம்பின. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 ஆயிரம் இடங்கள் குறைவாகும். மொத்தத்தில் 43 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியிருந்தன. மேலும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 90 ஆயிரம் பி.இ. இடங்கள் சேர்க்கை பெறவில்லை. 22 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 47 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தது.
ஏஐசிடிஇ புதிய நடைமுறை: தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் இந்த நிலை நீடிப்பதைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையில் புதிய முறைகளை ஏஐசிடிஇ கொண்டுவந்துள்ளது. 
இதற்கென ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரைகளையும் ஏஐசிடிஇ ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது 2020 ஆம் ஆண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை. பாரம்பரிய பொறியியல் துறைகளுக்கு அல்லாமல் வளர்ந்து வரும் துறைகளில் மட்டும் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக்கொள்ள அனுமதி வழங்குவது என ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது.
18 பொறியியல் கல்லூரிகள் மூட முடிவு: இதுபோன்ற காரணங்களாலும், மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்த காரணத்தாலும் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 2019-20 கல்வியாண்டில் தமிழகத்தில் 18 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த முடிவு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. 2019-20 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு முன்பாக, அனுமதி நீட்டிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக ஏஐசிடிஇ-க்கு அனைத்து பொறியியல் கல்லூரிகளும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அனுமதியை பெறும் கல்லூரிகள் மட்டுமே, அந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். 
அந்த வகையில், 2019-20 கல்வியாண்டு அனுமதி நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க ஜனவரி 19 கடைசி தேதி என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. 
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் குமார் கூறியதாவது:
அனுமதி நீட்டிப்புக்கு கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், 17 பொறியியல் கல்லூரிகள் எந்தவொரு விண்ணப்பத்தையும் பல்கலைக்கத்திடம் சமர்ப்பிக்கவில்லை. ஒரு பொறியியல் கல்லூரி மட்டும், மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்திக்கொள்ள விண்ணப்பத்திருக்கிறது என்றார்.
பல்கலைக்கழகத்திடம் எந்தவொரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவில்லையெனில், அனுமதி நீட்டிப்பு கிடைக்காது. எனவே, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்காத 17 கல்லூரிகள் உள்பட 18 பொறியியல் கல்லூரிகளிலும் 2019-20 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றனர் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.
கடந்த 2018-19 கல்வியாண்டில் 2 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இதுபோல பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பம் எதையும் சமர்ப்பிக்காமல் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com