கல்லூரி நிர்வாகத்தின் அராஜகப் போக்கைப் பார்த்து பயந்து போன பேராசிரியர்கள் அனைவரும் ஒருமித்து ஒரு செயலை செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தில் இணைந்திருந்தால், அவர்களுக்கு எதிராக கல்லூரி நிர்வாகம் சில பல நடவடிக்கைகளை எடுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பியது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய ஆசிரியர்கள், தங்களுக்கு நிர்வாகத்தினால் ஏதேனும் உடல் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு பெறும் வகையில் ரூ.1 கோடிக்கு காப்பீடு செய்துள்ளனர்.
38 முதல் 49 வயதுடைய 12 ஆசிரியர்களில் 8 பேர் காப்பீடு எடுத்துவிட்டனர். மற்றவர்களின் காப்பீட்டுக்கான விண்ணப்பப் பணிகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை.
புதிய கல்லூரி நிர்வாகம், தங்களது கல்லூரியில் பணியாற்றும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.
தங்கள் மாணவர்கள் மற்றும் சக ஊழியர்களைக் கொண்டு அவர்கள் மீது புகார் கொடுக்கச் சொல்வது உள்ளிட்ட பல சித்து விளையாட்டுகளையும் நிர்வாகம் நடத்தி வருகிறது. கல்லூரி நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்குப் பயந்து சிலர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தில் இருந்து விலகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.