உதவி மருத்துவர் பணி: சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நிறைவு

மாநிலத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 1,884 உதவி மருத்துவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் புதன்கிழமையுடன் நிறைவடைகிறது


மாநிலத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 1,884 உதவி மருத்துவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் புதன்கிழமையுடன் நிறைவடைகிறது. அதன் அடிப்படையில் தேர்வாகவுள்ள மருத்துவர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலி பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் இடங்களை நிரப்புவதற்காக நாட்டிலேயே முதன்முறையாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. அந்த வாரியத்தின் மூலமாக இதுவரை 10,933 மருத்துவர்கள், 9,533 செவிலியர்கள் மற்றும் 4,198 இதர பணியாளர்கள் என 24,664 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில், உதவி மருத்துவர் (பொதுப் பிரிவு) நிலையில் காலியாக உள்ள 1,884 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை கடந்த செப்டம்பர் மாதத்தில் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதற்காக 10,018 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 9,353 பேர் (93.4 சதவீதம்) பங்கேற்றனர்.
இந்த நிலையில், தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில், 2,073 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் இயக்குநரக (டிஎம்எஸ்) வளாகத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில், புதன்கிழமையுடன் அப்பணிகள் நிறைவடைய உள்ளன. விரைவில் தகுதியானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com