ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளியில் ஆசிரியர்களை நியமித்து விஜய் ரசிகர்கள் பாடம் நடத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர்களின் வேலைநிறுத்தம் 2ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 8 ஆயிரம் பேர் பற்கேற்றுள்ளதால் அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம், சின்னியகவுண்டன் புதூரில் உள்ள ஆரம்ப பள்ளியில் 2 ஆசிரியர்களை நியமித்து விஜய் ரசிகர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.