மதுரை: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்விகளை எழுப்பியுள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கு முன்பு மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதா? ரத்து செய்வதற்கு முன் அனுமதி பெற்றதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்த தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக ரத்து செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவில், அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இல்லை. மத்திய அரசுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சுசிதரன், ஆதிகேசவலு ஆகியோர், இடைத்தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்துக்கு கேள்விகளை எழுப்பி அது குறித்து 30ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.