காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்டும் முயற்சிக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக தடை பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் பாஜகவுக்குக் கிடைக்கும் தேர்தல் ஆதாயத்தை மட்டுமே மனதில் கொண்டு தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தின் அனுமதியின்றி அணைகட்ட அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினாலும், கர்நாடக அரசின் அனைத்து சட்டவிரோத முயற்சிகளுக்கும், ஒரு நீண்டகாலத் திட்டத்துடன் மத்திய அரசு உற்றதுணையாக இருந்து தமிழக விவசாயிகளுக்கும் தமிழகத்துக்கும் துரோகம் இழைத்து வருகிறது.
இந்த நிலையில்தான், தமிழக அரசுக்கு ஏற்கெனவே அனுப்பிய கடிதத்துக்கு எந்தக் கருத்தையும் இதுவரை சொல்லவில்லை என்று புதிய காரணம் ஒன்றை கர்நாடகம் தெரிவித்து, மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கியிருக்கிறது.
தமிழக அரசின் ஒப்புதல் இன்றி அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று நாடகமாடிய மத்திய அரசும் இந்த திட்ட அறிக்கையை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆனால், தமிழகத்தின் அனுமதி இல்லாமல், கர்நாடகத்தின் திட்ட அறிக்கையை எப்படி பெற்றீர்கள் என்று இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பாமல் உள்ளார். இது கண்டனத்துக்குரியது.
மேக்கேதாட்டு அணை பிரச்னையில் இனியும் தாமதிக்காமல், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தற்போதைய நிலையை எடுத்துரைத்து, புதிய அணை கட்டுவதற்கு உடனடியாக தடை பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.