
புலியின் கால் தடத்தை ஆய்வு செய்யும் தலமலை வனச் சரக அலுவலர் பழனிசாமி.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைப் பொழிவுக்குப் பின் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி 6 நாள்கள் நடைபெற்றது. இதில், புலிகள், சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதில் 7 வனச் சரகங்கள் உள்ளன. மழைப் பொழிவுக்குப் பின் வனத்தில் வாழும் விலங்குகள், தாவரங்கள், மரங்கள், நீர்நிலைகள், வன உயிரினங்கள் நடமாட்டம் குறித்த கணக்கெடுப்புப் பணி கடந்த 6 நாள்களாக நடைபெற்று புதன்கிழமை நிறைவுபெற்றது.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்லிடப்பேசி மென்பொருள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், கணக்கெடுப்புப் பணி துவங்கப்பட்ட இடம், தூரம், அங்கு பார்த்தவற்றை பதிவு செய்வது என அந்தந்த இடத்தில் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்தனர். மேலும், கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் குறித்து சுயப்படம் (செல்ஃபி) எடுத்தும் பதிவு செய்தனர். இறுதியாக இப்பணி முடிவுறும் இடத்தில் அதனை நிறைவு செய்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் பரிமாற்றம் செய்தனர்.
தவிர, வன ஊழியர்கள் ஜிபிஎஸ், ரேஞ்ச் ஃபைண்டர் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு மேற்கொண்டனர். தலமலை, பவானிசாகர் வனப் பகுதியில் நேரடியாக புலிகளைப் பார்த்தனர். இப்பகுதிகளில் சிறுத்தையின் கால் தடம், புலிகளின் கால் தடம் அவற்றின் எச்சம் பதிவு செய்யப்பட்டது.
இதில், புலிகள் எண்ணிக்கை 74-இல் இருந்து 85 ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அனைத்து வனச் சரகங்களிலும் புலியின் கால்தடம் பதிவாகியிருப்பதால் 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு புலி இருப்பதாகத் தெரிகிறது. மேலும், ரேஞ்ச் ஃபைண்டர் மூலம் தொலைவில் உள்ள வன விலங்குகள் நடமாட்டத்தையும், நீர்நிலைகளையும் ஆய்வு செய்தனர். 5 கி.மீ. பரப்பளவுக்கு கண்ணில் தென்படும் வன விலங்குகள், தாவரங்கள், நீர்நிலைகள், மரங்கள் என அனைத்தையும் குறிப்பு எடுத்து அனுப்பினர். சத்தி புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், தலமலை, டி.என்.பாளையம், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் ஆகிய 7 வனச் சரகத்தில் 46 குழுக்களில் 320 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் வனவர் தலைமையில் 5 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.