சென்னை: அந்த தீர்ப்பு வந்தால் இந்த ஆட்சி இருக்காது என்று சென்னையில் நடந்த கட்சி பிரமுகர் ஒருவரது இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை மேற்கு மாவட்டம் மயிலை பகுதி தி.மு.க. பிரமுகர் வில்லவன். இவரது இல்லத் திருமண விழாவானது நுங்கம்பாக்கத்தில் ஞாயிறன்று காலை திருமணத்தை நடத்தி வைத்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:
தற்போது இங்கு நடைபெற்ற திருமணம் ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு திருமணம் நடைபெற்றுள்ளது. இதுபோன்று சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் சீர்திருத்த திருமணங்களுக்கு 1967-ம் ஆண்டு தேர்தலில் வென்று தமிழக முதல்வராக அண்ணா பொறுப்பேற்றதும் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.
பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது. அது முடிந்ததும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி வரப்போகிறது என்று இங்கு சிலர் பேசினார்கள். எனக்கு ஒரு சந்தேகம், பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் பொதுத் தேர்தல் வந்துவிடும் என தெரிகிறது. காரணம் இன்று தமிழகத்தில் ஒரு மைனாரிட்டி ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை மத்தியில் உள்ள பா.ஜனதா ஆட்சி தான் முட்டுக்கொடுத்து காப்பாற்றி கொண்டிருக்கிறது.
2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல். ஏ.க்கள் வாக்களித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி செல்லுமா? செல்லாதா? என்பதில் பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பு வர உள்ளது. அப்போது நிச்சயமாக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருக்காது.
இதை நான் சொன்னால் கனவு காண்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நான் கனவு காணவில்லை. நினைவாக நடக்க த்தான் போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.