கட்சியின் எந்த தேர்தல் குழுவிலும் நான் இடம்பெறவில்லை: பேஸ்புக் பதிவில் அதிமுக எம்பி கருத்து 

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் 3 தேர்தல் குழுவிலும் தாம் இடம்பெறாதது குறித்து மைத்ரேயன் முகநூலில் பதிவிட்டுள்ளார். 
கட்சியின் எந்த தேர்தல் குழுவிலும் நான் இடம்பெறவில்லை: பேஸ்புக் பதிவில் அதிமுக எம்பி கருத்து 


மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என எந்த குழுவிலும் தாம் இடம்பெறாதது குறித்து மைத்ரேயன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.  

இதுதொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் தனது முகநூல் பதிவில், 

"நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் 2019 விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள கழகம் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களை கடந்த 23/01/2019 அன்று அறிவித்துள்ளது. மூன்று குழுக்களிலும் நான் இடம் பெறவில்லை. ஒருவரை குழுவில் சேர்ப்பதும், சேர்க்காதிருப்பதும் கட்சித் தலைமையின் விருப்பம், உரிமை.

கழகத்தில் நான் 1999 ல் இணைந்த பிறகு நடைபெற்ற 2001, 2006, 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் 2004, 2009, 2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்கள் அனைத்திலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிலும் ஜெயலலிதா என்னை சேர்த்து இருந்தார்கள்.

2009 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது நடைபெற்ற சுவையான சம்பவத்தினை இந்தப் பதிவில் எழுத விரும்புகிறேன். 

2009 ம் ஆண்டு தேர்தல் அறிக்கையே வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டு இருந்தது. மாநில, தேசியப் பிரச்சினைகளை ஒரு தேசியக் கண்ணோட்டத்தோடு அணுகி " வளமான இந்தியாவிற்கான செயல் திட்டம் - An Agenda For A Better India " என்ற தலைப்பில் அந்த தேர்தல் அறிக்கை தயாரானது.

2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் வெளியிட்டார். 

அத்தோடு வித்தியாசமான கோணத்தில் இந்த தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். அனைத்து பத்திரிகை நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான சந்திப்பு தி.நகர் பாண்டிபஜார் அருகே ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டலில் அன்றைய கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வெங்கடேஷால் ஏற்பாடு செய்யப்பட்டது. 

தேர்தல் அறிக்கையின் விவரங்களை ஸ்லைடுகள் மூலம் Power point presentation ஆக விளக்க வேண்டும். ஜெயா டிவியின் செய்தி ஆசிரியர் சுனில் செய்யலாம் என்று ஜெயலலிதாவிடம் கூறியபோது, " இதை மைத்ரேயன் செய்யட்டும், அதுதான் சரியாக இருக்கும் "என்று உத்தரவிட்டார். 

நிகழ்ச்சிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு எனக்கு தெரிவிக்கப்பட்டது. நானும் ஒரு மணிக்கும் மேலாக தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை விளக்கி எடுத்துரைத்தேன். 

நான் அறிந்த வரை ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ஸ்லைடுகள் மூலம் Power point presentation செய்தது அதுதான் முதல் தடவை. 

அடுத்த நாள் காலை ஜெயலலிதா கொடநாடு புறப்பட்டுச் சென்றார். பழைய விமான நிலையத்தில் கழகத்தின் தலைவர்கள் நின்று வணக்கம் தெரிவித்தார்கள். நானும் தான். புன்னகையோடு ஜெயலலிதாவும்  ஏற்றுக்கொண்ட பிறகு அவரது கார் விமான நிலைய நுழைவுவாயில் நோக்கி செல்கிறது. இரண்டு அடி நகர்ந்ததும் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கி என்னை கூப்பிட்டார்.
 
" மைத்ரேயன், நேற்று நீங்கள் சிறப்பாக செய்தீர்கள் என்று சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் " என்று வாழ்த்தி விட்டு விமானம் நோக்கி சென்றார்கள். 

இதைவிட எனக்கு வேறென்ன பாராட்டுப் பத்திரம் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com