பணி முடிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 19-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார் என்றார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
பிரதமர் வருகை தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட பாஜக நிர்வாகிகளிடையே திங்கள்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்திய அவர், தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தது: பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்துக்கு மதுரையில் அடிக்கல் நாட்டியுள்ளார்.
மேலும், தலா ரூ. 150 கோடியில் மதுரை, தஞ்சை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனைகளையும் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திறந்துவைத்துள்ளார்.
பிப்ரவரி 10 ஆம் தேதி திருப்பூருக்கு வரும் பிரதமர், பிப்ரவரி 19-ஆம் தேதி குமரி மாவட்டத்துக்கு வரவுள்ளார். குமரி மாவட்டத்துக்கு ரூ. 40 ஆயிரம் கோடி திட்டங்களை பிரதமர் தந்துள்ளார். அந்த திட்டங்களுக்கான திறப்பு விழாவும், மேலும் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல்நாட்டு விழாவும் பிப். 19-ம் தேதி நடைபெறும். கடந்த 2004-இல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நான்குவழிச் சாலை திட்டத்துக்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்துள்ள நான்குவழிச் சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் என்றார் அவர்.