திருச்சி: சமயபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதில் 5 பேரின் லாக்கர்களில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளைப் போயுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொள்ளைச் சம்பவத்தைப் பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்க ஒரு மோசடி கும்பல் தயாராகி வருகிறது.
அதாவது, வங்கிக் கொள்ளையைப் பயன்படுத்தி, வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண்ணை பெற முயற்சி நடந்துள்ளது.
இது குறித்து அந்த வங்கியின் வாடிக்கையாளர் அமுதா என்பவர் பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறிய ஜெயக்குமார் மற்றும் மீனாகுமரி என்ற இருவர், தன்னிடம் ஏடிஎம் பின் நம்பரைக் கேட்டதாக அமுதா கூறியுள்ளார்.
எனவே, பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் மட்டும் அல்லாமல், பிறத் துறை வங்கி வாடிக்கையாளர்களும் மோசடியாளர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.