சென்னை: சென்னையில் இன்று புதன்கிழமை ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.184 உயர்ந்து, 25,344-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், திருமணம் உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.184 உயர்ந்து ரூ.25,344க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.23 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.3,168க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த மாதத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து வந்தது.
கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2,905-ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.23, 240 ஆகவும் இருந்தது. அடுத்த ஒரு வாரத்தில் டிசம்பர் 8-ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.24,080 ஆக இருந்தது. அதன்பிறகு, தங்கத்தின் விலை கடந்த 10-ஆம் தேதி அன்று பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.24,608-யை தொட்டது. இதன்பிறகு, கடந்த சனிக்கிழமை ஒரு பவுன் தங்கம் ரூ.24,968 ஆக இருந்தது.
இந்நிலையில், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.25 ஆயிரத்தை கடந்தது. திங்கள்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.25,016-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.43.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.43,200 ஆகவும் இருந்தது.
தொடர்ந்து அதிகரிக்கும்: இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியது:
அமெரிக்காவில் பொருளாதார குறியீடு மற்றும் வேலை வாய்ப்பு குறியீடு சரிந்துள்ளது. இதுதவிர, மெக்சிகோ-அமெரிக்கா இடையே எல்லையில் வேலி அமைக்க அமெரிக்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு அந்தப்பகுதி மக்களும், எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மூன்று காரணிகளால் அந்தநாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி போயுள்ளது. இதனால், உலகச்சந்தையில் பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள். தங்கத்தில் முதலீடு அதிகரித்துள்ளதால், கடந்த ஒரு மாதத்தில் 1 அவுன்ஸ்க்கு (31.1 கிராம்) 50 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால், உள்நாட்டிலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் தங்கம் விலை மேலும் உயரும் என்றார் அவர்.
நடுத்தர மக்கள் பாதிப்பு: தங்கத்தின் விலை உயர்வு காரணமாக திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு நகை வாங்கும் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தை, மாசி மாதங்களில் அதிகளவு திருமணங்கள் நடைபெறும். இதற்காக தங்க நகைகள் அதிகளவு வாங்கப்படும். தங்கத்தின் விலை இப்போது பவுனுக்கு ரூ.25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். திருமணச் செலவுகளுடன், நகைகளுக்காக கூடுதலாகச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.