தனக்கு ஜாமின் வழங்க பல இடையூறுகள் உள்ளதாக பேராசிரியை நிர்மலா தேவி பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அக்கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இவர்கள் 3 பேரும் "தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்' என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இவர்களது மனுக்களை கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி விசாரித்த அமர்வு நீதிபதி லியாகத் அலி அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் அப்போது உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாதர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்காக சிபிசிஐடி தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் உயர்நீதிமன்ற கிளையில் ஒப்படைக்கப்பட்டன.
இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் நிர்மலா தேவி பேட்டியில்,
தன்னுடையை வாக்குமூலம் என சிபிசிஐடி போலீசார் கூறுவது தவறானது, எனக்கு ஜாமின் வழங்க பல இடையூறுகள் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.