ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் சார்பில், வரும் பிப்.9-ஆம் தேதி ஆந்திரத்துக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வேயின் ஒரு சுற்றுலா பிரிவாக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், பாரத தரிசன சுற்றுலா ரயில் என்னும் தனி ரயிலில் ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.
அந்தவகையில், தற்போது, ஆந்திரத்தில் உள்ள சக்தி பீடங்கள் மற்றும் கோயில்களை தரிசிக்க சிறப்பு யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு யாத்திரை பிப்ரவரி 9-ஆம்தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக துவாரக திருமலாவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, பெனுகுண்டாவில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீபீமேஸ்வர சுவாமி மாணிக்யம்பா தேவி சக்தி பீட தரிசனம், புருஹூதிகாதேவி சக்தி பீட தரிசனம், ஸ்ரீகூர்மத்திலுள்ள கூர்மநாத சுவாமி, சிம்மாச்சலத்தில் உள்ள வராக லஷ்மி நரசிம்ம சுவாமி, அரசவல்லியில் உள்ள சூரியநாராயண சுவாமி, அன்னாவரத்திலுள்ள ஸ்ரீ சத்யநாராயண சுவாமி மற்றும் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா ஆகிய கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் சென்று தரிசனம் செய்யலாம்.
5 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூ.6,160 கட்டணம். இதில், தென்னிந்திய சைவ உணவு, உள்ளூரைச் சுற்றி பார்க்க வாகன வசதி, தங்கும் இடவசதி, சுற்றுலா மேலாளர் மற்றும் பாதுகாவலர் வசதி ஆகியவை அடங்கும்.
இது குறித்து கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவு செய்ய 9003140680/ 681 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம். இந்தத்தகவல் ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.