மோடி அரசின் செயல்கள் இந்திய இறையாண்மையின் மீது தொடுக்கப்பட்ட போர்: சீமான் கடும் கண்டனம் 

ஒற்றை இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் மோடி அரசின் செயல்கள் யாவும் மாநிலங்களின் தன்னாட்சி மீதும், இந்தியாவின் இறையாண்மையின் மீதும் தொடுக்கப்பட்ட போர் என்று நாம் தமிழர் கட்சியின்.. 
மோடி அரசின் செயல்கள் இந்திய இறையாண்மையின் மீது தொடுக்கப்பட்ட போர்: சீமான் கடும் கண்டனம் 

சென்னை: ஒற்றை இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் மோடி அரசின் செயல்கள் யாவும் மாநிலங்களின் தன்னாட்சி மீதும், இந்தியாவின் இறையாண்மையின் மீதும் தொடுக்கப்பட்ட போர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியா என்பது ஒற்றை நாடல்ல! அது பல்வேறு தேசங்களின் கூட்டமைப்பு; பலதரப்பட்ட தேசிய இனங்கள் மாறுபட்ட அடையாளங்களோடு சங்கமித்து, ஒன்றுபட்டு வாழும் ஓர் ஒன்றியம். இந்நாட்டில் வாழும் எல்லா மொழிவழித்தேசிய இனங்களும் தங்களது தனித்த பண்பாட்டு விழுமியங்களோடும், தங்களுக்கேரிய வாழ்வியல் அடையாளங்களோடும் வாழும் பன்முகத்தன்மையைச் சிதைத்து அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு வேலைசெய்கிறது இந்துத்துவ அதிகாரப்பீடம். அதற்காகவே, ‘ஒரே மொழி! ஒரே நாடு! ஒரே பண்பாடு! ஒரே தேர்தல்! ஒரே தேர்வு! ஒரே பொதுவிநியோகம்!’ என ஒற்றை அடையாளத்தை நிலைநிறுத்த துடிதுடியாய்த் துடிக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

இந்தியா எனும் கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்றுக்கொண்ட பன்மைத்துவ நாட்டில் அதிகாரங்கள் யாவும் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு, பரவலாக்கப்படும்போதுதான் கூட்டாட்சித் தத்துவம் எனும் உயரிய கோட்பாடு உயிர்ப்பெறும். வலுப்பெறும்.

தற்போது கஸ்தூரி ரெங்கன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளைக் கொண்டு ‘புதிய கல்விக்கொள்கை’ எனும் பெயரில் மும்மொழிக்கொள்கைத் திட்டத்தின் வாயிலாக இந்தியைத் திணித்திட முற்படுவதும், நாடு முழுமைக்குமுள்ள அரசின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்த வழிவகைச் செய்வதும் மாநிலங்களின் கல்வி உரிமையை முழுமையாகப் பறிக்கும் கொடுஞ்செயலாகும். பல்வேறு வகையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், மாறுபட்ட நிலவியல் அமைப்புகளும் இருக்கிற இந்நாட்டில் ஒரே மாதிரியான தேர்வுமுறையினைக் கொண்டு வருவது சாத்தியமற்றது என்பது மட்டுமல்லாது சமூக அநீதியும் கூட.

அதேபோல, பொது விநியோகத்திட்டத்தை நாடு முழுமைக்கும் ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் மூலம் பெறலாம் என்ற அறிவிப்பானது பேரதிர்ச்சியைத் தருகிறது. பொதுவிநியோகத்திட்டத்தை மிகச்சிறப்பாக அமல்படுத்தி வரும் மாநிலங்களில் தமிழகம் முதன்மையானது. அதனால்தான், உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த முற்பட்டபோது அதனை முழுதாக எதிர்த்தோம். இப்போது தமிழகத்தின் பொது விநியோகத்தை இந்தியா முழுமைக்குள்ள எந்த மாநிலத்தவரும் பகிர்ந்துகொள்ளலாம் எனும் வாய்ப்பை வழங்கியிருப்பதன் மூலம், தமிழகத்திலுள்ள பொது விநியோகப்பொருட்களை வடநாட்டவர்கள் மிக எளிதாக அபகரித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.

அண்மையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிற வேளையில், பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கும் நாடு முழுமைக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த ஆலோசித்து வரும் மத்திய அரசின் முயற்சியானது நாட்டைச் சீர்குலைக்கும் பேரழிவுச் செயலாகும். இது இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனத்திற்கே எதிரானது. அடுத்தப் பாராளுமன்றத் தேர்தலுக்குள் 30 சட்டமன்ற, யூனியன் பிரதேசங்களுக்கு நாடு முழுதும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இவையாவற்றின் கால வரம்பையும் மாற்றியமைத்து, ஒருங்கிணைப்பது அசாத்தியமானது மட்டுமன்று அவசியமற்றதும்கூட!

கடந்த மார்ச், 2018 வரையிலான ஐந்தாண்டு கணக்கெடுப்பில் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 287 கோடி வாராக்கடனைத் தள்ளுபடி செய்தததாகப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறதே மத்திய அரசு, அத்தொகையைப் பெற்றிருந்தாலே எவ்வளவோ சாதித்திருக்கலாமே? ஆகவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பொருளாதாரச் சிக்கனத்திற்காக அல்ல! அது தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை மாநிலத்தில் வலுவாக ஊன்றுவதற்கும், நாட்டின் பன்முகத்தைச் சிதைக்கும் தங்களது ஒற்றை அடையாளத்துக்கு வலுசேர்ப்பதற்கும்தான் என்பது இதன்மூலம் மிகத்தெளிவாகிறது.

ஆகவே, அகண்ட பாரதத்தைக் கனவாகக் கொண்டு ஒற்றை இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் மோடி அரசின் இச்செயல்கள் யாவும் மாநிலங்களின் தன்னாட்சி மீதும், இந்தியாவின் இறையாண்மையின் மீதும் தொடுக்கப்பட்ட போர் என்பதைப் புரிந்து விழிப்புடன் இருக்க வேண்டும். ஆகவே, நாட்டின் ஓர்மையினையும், பன்முகத்தன்மையினையும் சீர்குலைக்கும் இம்முயற்சிகள் யாவற்றையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத்தவறும்பட்சத்தில், இந்தியா எனும் கட்டமைப்பே நிலைகுலையும் பேராபத்து இருக்கிறது என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com