தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் பாரதிராஜா ராஜிநாமா செய்தார்.
விக்ரமன் தலைமையிலான குழு இயக்குநர் சங்க நிர்வாகத்தைக் கவனித்து வந்தது. இந்த நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததை யடுத்து, புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த நிலையில் இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழு சென்னையில் கடந்த ஜூன் 10-ஆம் தேதி நடந்தது.
இதில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் தேர்தல் வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்தனர். இறுதியாக தலைவர் பதவிக்கு மட்டும் பாரதிராஜாவை முன் மொழிந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பாரதிராஜாவுக்கு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால், அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: என்னை போட்டி இல்லாமல் தலைவராகத் தேர்வு செய்த இயக்குநர் சங்க பொதுக்குழுவுக்கு நன்றி. ஆனால் தேர்தல் இல்லாமல் தலைமை பதவிக்கு வருவது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவேன். ஜனநாயக முறைப்படி தேர்வு நோக்கத்தில் எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன். சங்கத்தின் மூத்த உறுப்பினராக எனது பேரன்பு தொடரும் என்று தெரிவித்துள்ளார் பாரதிராஜா.